Tuesday, September 2, 2025

சூரிய குடும்பம் - கோள்களின் தொலைவுகள்

*சூரியக்குடும்பம்*

பெரும்பாலும் புத்தகங்களில், இணையத்தில் கிடைக்கும் சூரிய குடும்பத்தின் படங்கள், கோள்கள் அனைத்தும் சூரியனில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்ற சரியான புரிதலை ஏற்படுத்துவது போல் இல்லை. 

இதற்கான சரியான புரிதலை ஏற்படுத்துவதற்காக எனது பள்ளியில் மாணவர்களே புதன் முதல் நெப்டியூன் வரையிலான கோள்களாக பங்கேற்று நடித்து செயல் விளக்கம் கொடுக்கும் வாய்ப்பை தந்தார்கள்..

1 வானியல் அலகு= 1 மீ என எடுத்துக்கொண்டு (இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு ) சூரியனிலிருந்து பூமி எவ்வளவு தொலைவில் உள்ளதோ அத்த தொலைவை போல மற்ற கோள்கள் எத்தனை மடங்கு உள்ளது (மீட்டரில்) என்பதை கணக்கிட்டு அட்டவணையாக கொடுத்தேன். 

இச்செயல்பாடை நடத்திக் காட்டுவதற்காக அறிவியல் மன்ற மாணவர்கள் தாங்களாகவே முன்வந்தார்கள்.  

ஒரு மீட்டர் நீளமுள்ள குச்சியுடன் வந்து அவர்கள் என்னிடமிருந்து அந்த அட்டவணையை பெற்றுக் கொண்டார்கள். ஒரு பக்கெட்டை கவிழ்த்து அதைச் சுற்றி வட்டமிட்டு பின்பு அதில் M.sand நிரப்பி *"சார் இதுதான் சூரியன்"* என்றார்கள். 

பின்  அட்டவணையை ஒப்பிட்டு சூரியனிலிருந்து ஒவ்வொரு கோள் இருக்கும் (1AU=1 மீ) தொலைவினையும் M.sand கொண்டு கோடிட்டு காட்டினார்கள்.

அனைத்து கோள்களின் கோள்களின் தொலைவையும் குறிப்பிட்ட பின்னர், அந்தக் கோடுகள் எந்த கோள்களை குறிப்பிடுகின்றன என்பதை அறிவதற்காக கோட்டின் அருகிலேயே கோள்களின் பெயர்களை எழுதினார்கள்.

(இதற்கும் M.Sand தான். பள்ளியில் எந்த பொருள் எளிதாக கிடைக்கிறதோ அவற்றைக் கொண்டே வானை அளந்தோம்)

ஆர்வமான மாணவர்கள் அந்தந்த இடங்களில் ஒவ்வொரு  கோள்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட தாள்களை எடுத்துக்கொண்டு நின்றார்கள்.

மற்ற மாணவர்கள் அனைவரும் கோள்கள் ஒவ்வொன்றும் உண்மையில் இவ்வளவு இடைவெளியில் உள்ளனவா என்பதை புரிந்து கொண்டனர். 

"அடேங்கப்பா, என்ன சார் நெப்டியூன்ல்லாம் இவ்வளவு தூரமா இருக்குது?" என்று ஆச்சரியமடைந்தனர்.

(சூரியனின் மையத்துக்கும் பூமியின் மையத்திற்கும் இடையே உள்ள சராசரி தொலைவு ஒரு வானியல் அலகு எனப்படுகிறது. இது 149,597,870.7 கிலோமீட்டருக்கு சமம். இதை பன்னாட்டு அளவு முறையில்  *1AU=1.496X10^11 மீ* என குறிப்பிடுவார்கள்.)

இச்செயல்பாடு எதிர்வரும் *செப்டம்பர் 7, 8 தேதிகளில் நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம்* குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆர்வமூட்டும் செயல்பாடாக நடந்தது.